இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக அறிவித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்தப் போரில் இலங்கையில் இருந்த தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மே 18 அன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க | இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேரறிவாளன் சந்திப்பு
இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மே18ஆம் தேதி தமிழினப் படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதன்மூலம் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அங்கீகரித்த முதல் நாடாக கனடா உள்ளது. கனடா அரசின் இந்த தீர்மானத்திற்கு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு: நிலைமை சரியாகுமா?
கனடா அரசின் அறிவிப்புக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளின் விழிகளைத் திறப்பதற்கும் கனடாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும் ஈழத் தமிழர் துயரைத் தடுப்பதற்கும் முன்வர இத்தீர்மானம் உதவும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.