கொழும்பு: அரசுக்கு எதிரான போராட்டம் அல்லது போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலம் அல்லது அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நசுக்குவோம் என்று அதிபா் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை எச்சரித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அவா் பேசியதாவது:
இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை. பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும்.
"சட்டப்பூர்வமாக யார் வேண்டுமானாலும் போராட்டங்கள் அல்லது கூட்டங்களை நடத்தலாம். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கத்தலாம், என்னை சர்வாதிகாரி என்று சொல்லலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. இருப்பினும், நீங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு முன்பு காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும்". காவல் துறை அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடலாம் என யாராவது நினைத்தால் அவர்களை தடுத்து நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் யாராவது ஈடுபட்டால் அனுமதிக்க மாட்டேன். அதனை ராணுவ பலம் அல்லது அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நசுக்குவோம்" வன்முறைக்கு இடமில்லை என்று கூறினார்.
இதையும் படிக்க | 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
"இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்னை உள்ளது. தேர்தல்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர், மேலும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போயுள்ளன," என்று அவர் கூறினார்.
விக்கிரமசிங்க தனது உரையின் போது, நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் அடுத்த மாதம் 11 ஆம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் அதிகாரப் பகிர்வு உள்பட இன நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அவா் அழைப்பு விடுத்தார்.
மேலும், 1980களில் இருந்து பல்வேறு தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையின் 75 ஆவது சுதந்திர நாளை கொண்டாடும் முன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் இன நெருக்கடிக்கு இறுதி தீா்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
உணவு, எரிபொருள், மருந்து, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்கள் வீதியில் இறங்கி சட்ட விரோதமான போராட்டங்கள் ராஜபட்ச தலைமையிலான அரசாங்கத்தை அகற்ற வழிவகுத்தது.
ராஜபட்ச ஆதரவு கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் விக்ரமசிங்க ஆட்சி அமைத்துள்ளார், ஆனால், ராஜபட்ச ஆட்சி தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.