பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் அவசரகால பட்ஜெட் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ரிஷி சுனக்கின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், லிஸ் டிரஸ் பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே மிக முக்கியமான மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு வருகிற நவம்பர் 6ஆம் தேதி எகிப்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு புவி வெப்பமாதலை தடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளன. கடந்த ஆண்டு இந்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றது. அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த முடிவினை எதிர்க்கட்சிகள், இது ஒரு தவறான முடிவு என கடுமையாக விமர்சித்து வருகின்றன.