உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். அதில், முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்கும் அவரது கல்லூரி கால முன்னாள் காதலியுமான ஜெனிஃபர் க்வென்னும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை, ஜெனிஃபர் அமெரிக்காவில் உள்ள ஏல மையத்தில் அண்மையில் ஏலம் விட்டார். அதில் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படம் ரூ.1.3 கோடிக்கு ஏலம் போனதாகத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?
இதுகுறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், பூஸ்டனில் இயங்கும் ஆர்ஆர் ஏல மையம், இதுவரை கண்டிராத, மிகவும் நினைவில் இருக்கக் கூடிய ஜெனிஃபர் க்வென் - எலான் மஸ்கின் புகைப்படங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை, எலான் மஸ்க், ஏலம் விடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றை தனது டிவிட்டர் பக்க புரொஃபைல் புகைப்படமாக வைத்திருந்தார்.
வளர்ப்பு மகனின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாததால், எலான் மஸ்கின் முன்னாள் காதலி இந்த முடிவை எடுத்ததாகவும், அவர் ஏலம் விட்ட புகைப்படமும், கடிதமும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
டெஸ்லா நிறுவனரும், உலகின் முன்னணி செல்வந்தருமான எலான் மஸ்க் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஜெனிஃபர் க்வென் என்பவரைக் காதலித்துள்ளார். எலான் மஸ்க்கின் ஜூனியராக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் அவர் பயின்றுள்ளார்.
தங்களுடைய 20வது வயதில் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு இருவரும் உடன்பட்டு பிரிந்துள்ளனர்.
தற்போது ஜெனிஃபருக்கு 48 வயதாகிறது. தன்னுடைய வளர்ப்பு மகனின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாததால், எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், காதலிக்கும்போது அவர் எழுதிய கடிதங்களையும் ஏலம் விட்டுள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக்கொள்வதாக ஏல நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.