அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் பொதுவெளியில் சிறுநீர் கழித்ததற்காக 10 வயது கருப்பினச் சிறுவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்தச் சிறுவன் மூன்று மாதங்களுக்கு காவல் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் மற்றும் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட் (Kobe Bryant) பற்றி இரண்டு பக்கங்களுக்கு எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என மிசிசிப்பி நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.
சிறுவன் தாயுடன் வெளியில் சென்றிருந்த போது, அவர்களின் காருக்குப் பின்னால் சிறுநீர் கழித்துள்ளான். இதனைப் பார்த்த காவல் துறையினர் சிறுவனைக் கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் 10 வயது சிறுவனை சிறையில் பூட்டி வைத்ததாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 'இரு நாடுகள்' தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை : இஸ்ரேல்!
'இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்! பொது வெளியில் சிறுநீர் கழிக்காத ஆண் அமெரிக்காவிலேயே கிடையாது. இந்த குற்றத்திற்காக குழந்தையை மாதம் ஒரு முறை மேற்பார்வை அதிகாரியை சந்திக்க சொல்வதும், 'மேற்பார்வை தேவைப்படக் கூடிய குழந்தையாக' இவரை சித்தரிப்பதும் ஏற்க முடியாதது' எனக் குழந்தையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே போன்ற குற்றத்திற்கு ஒரு வெள்ளையினச் சிறுவனைக் கைது செய்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய செனட்டோபியா காவல்துறை தலைவர், 'குழந்தைக்கு விலங்கு மாட்டவில்லை. குழந்தையிடம் சரியாக நடந்துகொள்ளாத காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் இப்போது பணியில் இல்லை, மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.' எனத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பினை பல்வேறு அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.