
இஸ்ரேல், காஸா நகரத்தில் உள்ள இரண்டு குடியிருப்புகளைத் தகர்த்தது. இந்தத் தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டவர்களும் அடக்கம்.
ஐநாவின் பொதுச் செயலர், காஸாவில் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை, இஸ்ரேலின் தாக்குதல், வாழ்வாதார பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் தடங்கலை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அலைபேசியில் பேசியுள்ளார். ஜோ பைடன், நாங்கள் போர் நிறுத்தத்தைக் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது இலக்கை அடையும் வரை போரைத் தொடரலாம் என்பதற்கான சமிக்ஞை இதுவென நெதன்யாகு அலுவலகம் கருதுகிறது.
மேலும், பாலஸ்தீனர்களில் ஹமாஸ் அல்லது ஜிகாத் குழுவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் நபர்களை விசாரிக்க ராணுவம் கைது செய்து இஸ்ரேல் அழைத்துச் செல்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்புமாறு ஹமாஸ் உலக அமைப்புகளை வலியுறுத்தி வருகிறது.
காஸா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் பலியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இஸ்ரேல் வடக்கு மற்றும் தெற்கில் தனது வான்வழி, தரைவழி போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.
கட்டிட இடிபாடுகளிடையே சிக்கி இறந்த மனிதர்களின் உடல்களை பூனைகள் உண்பது போலான காட்சிகள் நிகழ்வதாகக் களத்திலிருந்து தகவல்கள் வெளியாகின்றன.
இஸ்ரேலில், தங்கள் நாட்டில் இருந்து ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்பதில் கால தாமதம் ஏற்படுவதால் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.