செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தளமான ‘சாட் ஜிபிடி’ உலகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு தளமான ‘சாட் ஜிபிடி’ கடந்த நவம்பா் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே மக்களிடம் இதற்கு மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
'சாட் ஜிபிடி' என்பது செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) மூலம் உரையாடலில் தகவல் அளிக்கும் சேவை வசதி ஆகும். இதன் மூலம் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக 'சாட் ஜிபிடி' பதிலளிக்கிறது.
மைக்ரோசாஃப்ட நிறுவனத்தின் தேடு பொறியான ‘பிங்’-ல் சாட் ஜிபிடி-யை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக, சாட் ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் பல கோடி டாலா்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், 'சாட் ஜிபிடி' குறித்து மைக்ரோசாஃப் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 'சாட் ஜிபிடி' அலுவலகப் பணிகளை துரிதப்படுத்தும் என்றும் உலகையே மாற்றும் எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.