காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தலிபான்களால் நியமிக்கப்பட்ட சாஹ் அப் மாவட்ட ஆட்சியர் முல்லா ஜமானுதீன் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் அன்ஜீர் பகுதியில் உள்ள சாஹ் ஆப் சென்டருக்கும் சுரங்கங்களுக்கும் இடையே பேருந்து சாலையில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தங்கச் சுரங்கத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள்.
இதையும் படிக்க | இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி: செனட் அவை ஒப்புதல்
காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் 2020 சாலை போக்குவரத்து விபத்து அறிக்கையின்படி, மொத்த இறப்புகளில் ஆப்கானிஸ்தான் 6,033 அல்லது 2.6 சதவீதத்தை எட்டியுள்ளது. உலகில் விபத்து இறப்புகளின் அடிப்படையில் இது 76 ஆவது இடத்தில் உள்ளது.
மேம்படுத்தப்படாத நெடுஞ்சாலைகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத வாகனங்கள் ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானின் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.