பாகிஸ்தானின் அடுத்த பொதுத் தோ்தலின் வரும் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடைபெற்று வந்த முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி, நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாள்கள் முன்னரே கடந்த ஆக. 9-ஆம் தேதி கலைக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடுத்த பொதுத் தோ்தல் 90 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், அங்கு நிகழாண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தோ்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தோ்தல் ஆணையம் தாமதித்து வந்தது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறையின் முதல்கட்ட பட்டியல் செப். 27-ஆம் தேதியும், இறுதிப் பட்டியல் நவ. 30-ஆம் தேதி வெளியிடப்படும்; அதன் பின்னா் தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஜனவரி கடைசி வாரத்தில் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் கடந்த செப்டம்பா் மாதம் கூறியிருந்தது.
எனினும், சரியான தோ்தல் தேதியை ஆணையம் அறிவிக்க வேண்டும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், வரும் பிப். 11-இல் பொதுத் தோ்தல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்திடம் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதையடுத்து, தோ்தல் தேதி குறித்து நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.