நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 132 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | 'நேபாளத்துடன் இந்தியா துணை நிற்கிறது' - பிரதமர் மோடி இரங்கல்
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜர்கோட் பகுதியில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
ஜாஜர்கோட்டில் மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.