பிணைக்கைதிகளை விடுவிக்க... : கத்தாரின் கோரிக்கை!
கத்தார் அரசு, செவ்வாய்கிழமை (நவ.14) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பையும் பிணைக்கைதிகளை வெளியிடும் ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் பின் முகமது அல்-அன்சாரி தோஹாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, காஸாவில் நடக்கும் பேரழிவு இருதரப்பிடையே பேச்சுவார்த்தை நடத்த தடையாக உள்ளது.
மேலும் அவர், “இரு தரப்புக்குமிடையே மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைத் தவிர இந்தத் தீவிரமான சூழல் மாற்றமடைய வேறு வழி இல்லை என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கத்தார் இரு தரப்புக்கிடையே இடையீட்டாளராகச் செயல்பட்டு வருகிறது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கும் பிணைக்கைதிகளை வெளிக்கொண்டு வருவதற்கும் பேசிவருகிறது.
திங்கள்கிழமை (நவ.13) அன்று இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் கடத்தி வந்த பிணைக்கைதிகளில் 100 பெண் மற்றும் குழந்தைகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக இஸ்ரேல் அரசு, அவர்கள் சிறையில் வைத்துள்ள 200 பாலஸ்தீன குழந்தைகளையும் 75 பெண்களையும் விடுதலை செய்யும் என்கிற கோரிக்கை ஹமாஸிடம் முன்வைக்கப்பட்டது.
ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித்தொடர்பாளர் அபு ஒபெய்தா பேசும்போது, அதிகபட்சம் 70 பேரை மட்டுமே விடுதலை செய்ய இயலும், அதுவும் இஸ்ரேல் 5 நாள்களுக்குப் போர் நிறுத்தத்திற்கும் காஸா மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உடன்பட்டால் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘இனி காஸா என்ற பகுதியே இருக்கக் கூடாது!’
இஸ்ரேலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மக்களை வெவ்வெறு குழுவினர் பிணையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல், பிணைக்கைதிகள் எல்லோரும் விடுவிக்கப்படும்வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஏற்கெனவே கத்தார் இடையீட்டில் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.