போர்த் திறனை வலுப்படுத்தும் இந்தியா

இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த புதிய கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது, பாதுகாப்பு அமைச்சகம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: இந்திய ராணுவத்தின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில் ரூபாய் 2.23 லட்சம் கோடிக்கு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு  முதல் ஒப்புதலை அளித்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப் படைக்கு 97 தேஜஸ் இலகுரக போர் விமானங்களும் 156 பிரசாந்த் போர் ஹெலிகாப்டர்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையிலான ஆயுத கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்தியா கடந்த மூன்றாண்டுகளாக சீனாவுடன் சிறிய சிறிய மோதல்களை எதிர் கொண்டுவரும் நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தக் கொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே வாங்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆத்மநிர்பர்தா (சுய சார்பு) இலக்கை நோக்கிய முன்னெடுப்பாக இதனை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் நிர்வாகிக்கப்படும்  சு-30 போர் விமானங்களை மேம்படுத்தவும்  டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இவை தவிர, தானியங்கி இலக்கு கண்காணிக்கும் ட்ராக்கர் டி-90 டாங்கிகளுக்கான எண்ம கணினி, மத்திய தர கப்பல் தாக்கும் ஏவுகணை ஆகியவையும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

போர் உபகரணங்களுக்காக வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் தேவையை இது குறைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com