சிகாகோவை சேர்ந்த 104 வயது மூதாட்டி 13,500 அடி உயரத்திலிருந்து ‘ஸ்கை டைவ்’ செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
சிகாகோவில் முதலாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டமான 1918-ஆம் ஆண்டு பிறந்தவர் டோரதி ஹாஃப்னர். வருகின்ற டிசம்பர் மாதம் 105-வது வயதை எட்டும் இந்த மூதாட்டி, ஸ்பானிஸ் காய்ச்சல் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்.
கைத்தடி உதவியுடன் நடமாடி வரும் டோரதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி(4,100 மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்து ‘ஸ்கை டைவ்’ செய்துள்ளார்.
‘ஸ்கை டைவ்’ பயிற்சியாளருடன் விமானத்தில் இருந்து குதித்த மூதாட்டி, சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டில் பயணம் செய்து தரையிறங்கினார்.
இதன்மூலம் ‘ஸ்கை டைவ்’ செய்த மிக வயதான நபர் என்ற கின்னஸ் உலக சாதனையை டோரதி படைக்கவுள்ளார். முன்னதாக, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 103 வயது இங்கேகார்ட் என்பவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.
இதற்கு முன்னதாக, 100 வயதில் ஒருமுறை ‘ஸ்கை டைவ்’ செய்த டோரதி, அப்போது விமானத்திலிருந்து குதிக்க பயப்பட்டதாகவும், இந்த முறை தாமாக குதித்ததாகவும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதுமட்டுமின்றி, விடுமுறை நாள்களிலும் வார இறுதிநாள்களிலும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பல சாகசங்களில் டோரதி ஈடுபட்டுள்ளார்.
சுதந்திரமாக இருப்பதற்காக இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் டோரதி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.