காஸாவில் தொடர்ந்து வரும் போரால் கிட்டதட்ட 23 லட்சம் மக்கள் நாட்டின் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வலியுறுத்தலால் இஸ்ரேல் நேற்று (சனிக்கிழமை), எகிப்திலிருந்து காஸாவுக்குள் நுழையும் ராஃபா எல்லையைத் திறக்க அனுமதித்தது.
ஏற்கெனவே அத்தியாவசிய பொருள்களுடன் தயார் நிலையில் இருந்த 20 டிரக்குகள் காஸாவுக்கு சென்றுள்ளன. உணவு பொருள்களை மட்டும் அனுமதித்துள்ள நிலையில் எரிபொருள்கள் அனுமதிக்கப்படவில்லை.
மின்சாரமின்றி ஏற்கெனவே பாதி செயல்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மேலும் தாக்குபிடிப்பதற்கு சிரமமான சூழலே நிலவுகிறது.
எனினும், அனுமதிக்கப்பட்ட பொருள்களின் அளவு என்பது கடலில் ஒரு துளி போன்றது என விமர்சிக்கின்றனர் மனிதத்துவ ஆர்வலர்கள்.
இந்த நிலையில், துருக்கி அரசு காஸா மக்களுக்கு உதவும் பொருட்டு மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்களை விமானத்தில் எகிப்துக்கு அனுப்பியுள்ளது. அந்த விமானத்தில் 20 மருத்துவர்களும் சென்றுள்ளனர்.