இங்கிலாந்து நாட்டில் தாயின் அஸ்தியை காற்றில் தூவிய பெண்ணின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரின் அஸ்தியை காற்றில் தூவியதாக மகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் எவர்கிரீச் பகுதியில் வசித்துவந்தவர் பெளலின் பொல்ஹில். 96 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் நாளில் உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு மகளிடம் தனது இறுதி ஆசையைத் தெரிவித்துள்ளார். நான் இறந்த பிறகு என் சாம்பலை காற்றில் தூவ வேண்டும் என்பதுதான் அது. அதன்படி தாயின் சாம்பலை ட்ரோன் உதவியுடன் காற்றில் தூவி தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றினார் பெளலின் மகள் பிவெரேலி சார்ன்லே.
தாயின் இறுதி ஆசை குறித்து தனது கணவரிடம் பிவெரேலி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனியார் ட்ரோன் நிறுவனத்தின் உதவியை அவர்கள் நாடினர். ட்ரோன் மூலம் தங்கள் வீட்டில் உள்ள தோட்டத்திலிருந்து தாயின் சாம்பலை காற்றில் தூவினர். தங்கள் ஐ-போன் மூலம் ட்ரோனை அவர்கள் இயக்கும் வகையில், நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாக பேசிய பிவெரேலியின் கணவர், என் மனைவியின் தாயார் மிகவும் வெளிப்படையானவர். நாங்கள் எப்போதுமே தோட்டத்தில்தான் நேரம் செலவிடுவோம். இப்போது என் மனையின் தாயார் இல்லை. அவரின் அஸ்திதான் இந்த காற்றில் நிறைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.