அமெரிக்காவில் 10 பெண்களில் 8 பேர் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக்கொள்ள விரும்புவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் பெயருடன் கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்வதைப்போல அல்லது முதல் எழுத்தை (இனிஷியலாக) சேர்த்துக்கொள்வதைப்போல, அமெரிக்காவில் கணவரின் பெயர் அல்லது குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு காலகட்டங்களாக திருமண முறைகள் மாறிவருகின்றன. ஆனால், திருமணத்துக்குப் பிறகு தங்கள் பெயருடன் கணவர் பெயரை பெண்கள் சேர்த்துக்கொள்வது மட்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த பியூ ஆய்வு நிறுவனம், திருமணமான பெண்களிடம் கணவர் பெயரைச் சேர்த்துக்கொண்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், எதிர்பாலினத்தவரைத் திருமணம் செய்துகொண்ட பெண்களில் 79% பேர், தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 14% பெண்கள் தங்கள் பெயரை மட்டும் வைத்துக்கொள்கின்றனர். 5% பெண்கள் கணவர் பெயரையும் தங்கள் குடும்பப் பெயரையும் சேர்த்து வைத்துக்கொள்கின்றனர்.
இதேபோன்று ஆண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மாற்றுப்பாலினத்தவரை திருமணம் செய்துகொண்ட ஆண்களில் 92% பேர் தங்கள் பெயரை மட்டுமே வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 5% ஆண்கள் மட்டுமே மனைவியின் பெயரை சேர்த்துக்கொள்கின்றனர். 1% ஆண்கள் இரு பெயரையும் இணைத்து வைத்துக்கொள்கின்றனர்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் எண்ணிக்கையளவில் குறைவு என்பதால், அதற்கு தனி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று திருமணம் ஆகாத ஆண், பெண் உள்பட அனைத்து பாலினத் தேர்வர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், 33% பேர் தங்கள் இணையரின் பெயரை சேர்த்துக்கொள்வதில் விருப்பம் தெரிவித்துள்ளனர். 23% பேர் தங்கள் பெயரை மட்டுமே வைத்துக்கொள்வதாகவும், 17% பேர் இரு பெயரையும் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 24% பேர் இது குறித்து எந்தமுன் யோசனையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.