வங்கக் கடலில் காணாமல் போன மீனவர்கள் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
சோனாடியா தீவின் மேற்கு பகுதியில் மீன்பிடி படகு மிதப்பதை கண்ட உள்ளூர்வாசிகள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மீன்பிடி படகின் குளிர்பதனக் கிடங்கில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் அனைவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார்.
தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டனர். தொடர்ந்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
குறைந்தது 10 முதல் 12 நாட்களுக்கு முன்பு ஒரு கொள்ளை கும்பல் மீனவர்களை தாக்கி கொன்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காணாமல் போன மீனவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வங்கதேச மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.