ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தங்கள் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என ஆண்டின் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ரஷிய ஆயுதப் படையோடு இணைந்து போரிடத் தேர்வு செய்யப்பட்ட 2,44,000 பேர் உள்பட 6,17,000 வீரர்கள் களத்தில் உள்ளதால், உக்ரைனில் போரிட மேலும் இரண்டாம் கட்டமாக அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.
24 ஆண்டுகளுக்கு மேலாக ரஷியாவில் அதிபராகத் தொடரும் புதின், வருகிற 2024 தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் செய்தியாளர்களையும் மக்களின் கேள்விகளையும் எதிர்கொள்வது ரஷியாவில் நடைமுறை. அப்படியான சந்திப்பு கடந்த ஆண்டு போர் காரணமாக நிகழவில்லை.
இரண்டு வாரமாக ரஷியாவின் பொதுமக்களிடமிருந்து உக்ரைன் போர், ராணுவ வீரர்களின் ஊதியம், குடும்ப நிலை தொடர்பாக கேள்விகள் திரட்டப்பட்டுள்ளன.
இந்தாண்டு பன்னாட்டு செய்தியாளர்களுக்கும் அதிபர் உடனான் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போர் ஆரம்பித்த பிறகு அவர் பன்னாட்டு செய்தியாளர்களை எதிர்கொள்வது இதுவே முதல்முறை.
மேலும் படிக்க: எலான் மஸ்க்கின் புதிய ரோபோ!
மாஸ்கோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரம், ராணுவமயமாக்கம் ஆகியவற்றை அகற்றுதல் மற்றும் நடுநிலைத்தன்மையை உக்ரைனில் கொண்டு வருவது ஆகிய நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் இலக்கு நிறைவேற்றப்படும் வரை உக்ரைனில் அமைதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.