போருக்கு நடுவில் பிறந்த குழந்தை போரிலேயே பலியாகிய சம்பவம் காஸாவில் நிகழ்ந்துள்ளது. காஸாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் நிகழ்த்திய குண்டுவீச்சினால், பிறந்து 17 நாள்கள் கூட ஆகாத பெண் குழந்தை பலியாகியுள்ளது.
விடியலுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்ட அடுக்குமாடி வீட்டின் தளத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பிறந்த குழந்தை, அவளின் அண்ணன் 2 வயது சிறுவன் உள்பட 27 பேர் பலியாகியுள்ளனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் காயமுற்று இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டரை மாதங்களாகத் தொடர்ந்து வரும் போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாகக் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காஸாவில் ஹமாஸின் இருப்பிடங்களைத் தாக்குவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ்தான் பொதுமக்களின் வாழ்விடங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத பெண் குழந்தை போர் மத்தியில் பலியாகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்-அமீரா அய்ஷா எனப் பெயரிட யோசித்ததாக குழந்தையின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
இதையும் படிக்க: கைதிகள் பரிமாற்றப் பேச்சு: ஹமாஸ் நிராகரிப்பு
பலியாகிவரும் பாலஸ்தீனர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்கிறது காஸா அமைச்சகம்.