ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் காஸாவுக்குத் தேவையான வாழ்வாதார பொருள்கள் தடையின்றி கிடைக்கச் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஸாவில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகள் விரைவாக சென்றுசேரவும் மக்கள் எதிர்கொள்ளும் பசி மற்றும் விரக்தியிலிருந்து விடுவிக்கும் வகையிலான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஒரு வாரக் கால தாமதத்திற்கு பிறகு இந்தத் தீர்மானத்தில் வாக்களிப்பதிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. முன்னதாக தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரு தீர்மானங்களை ரத்து செய்தது போல இல்லாமல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உதவியுள்ளது.
தளர்த்தப்பட்ட தீர்மான வரைவில் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த, ஐ.நாவுக்கு மட்டும் காஸாவுக்குள் நுழையும் வாழ்வாதார உதவிப் பொருள்களைச் சோதனை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கும் முடிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஐநா இருதரப்பையும் சாராத ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானம் கோரியுள்ளது.
மேலும், ‘உடனடி போர் நிறுத்தம்’ என்கிற பதத்தைத் தளர்த்தி ‘போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளை உருவாக்குதல்’ என மாற்றப்பட்டுள்ளது.
இதனை ‘வலுவில்லாத தீர்மானம்’ என விமர்சித்து ரஷ்யா வாக்களிப்பைத் தவிர்த்தது.
15 நிரந்தர உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 13-0 என்ற கணக்கில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த அரபு நாடுகளின் தூதர் லானா நஸீபே, “நாம் எல்லோரும் எதிர்பார்த்த இந்தத் தீர்மானம் தற்போது நிறைவேறியிருப்பது கிறிஸ்துமஸ் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காஸா மக்களின் துயரைத் தணிக்க பாதுகாப்பு கவுன்சில் வேலை செய்து கொண்டிருக்கிறது என்கிற சமிக்ஞையை அவர்களுக்கு இது உணர்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: செக் குடியரசு பல்கலை.‘தாக்குதல் நடத்தியவா் தற்கொலை’
ஹமாஸ் இந்த முன்னெடுப்பு, போதாமை நிறைந்தது என விமர்சித்துள்ளது. பயங்கரவாத ராணுவத்தின் தாக்குதலில் இருக்கும் காஸாவின் தேவையை இது எந்தவிதத்திலும் நிறைவேற்றாது எனத் தெரிவித்துள்ளது.