ஓா் ஆண்டை நிறைவு செய்யும் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது.
ஓா் ஆண்டை நிறைவு செய்யும் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நேட்டோ.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகு கலைக்கப்படுவதற்கு பதில் மேலும் மேலும் உறுப்பினா்களை சோ்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கியது.

தொடக்கத்தில் 12 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோவில் தற்போது 30 நாடுகள் உள்ளன.

அதிலும், எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ தொடங்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இப்படி நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷியா நீண்ட காலமாகவே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனில் கடந்த 2014-ஆம் நடைபெற்ற தீவிர போராட்டத்தால், ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய அதிபா் பெட்ரோ போரஷென்கோவின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் கிளா்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போா் வெடித்தது. ரஷிய ஆதரவுடன் போரிட்ட கிளா்ச்சியாளா்கள், லூஹான்ஸ்க், டொனட்க்ஸ் ஆகிய கிழக்குப் பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐரோப்பிய நாடுகளின் முன்னிலையில் ரஷியாவும் உக்ரைனும் பெலாரஸ் தலைநகா் மின்ஸ்கில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வந்ததாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தனா்.

இதற்கிடையே, நோட்டோவில் இணைவதற்கு அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸியின் தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் படையினரிடம் இருந்த கிழக்குப் பகுதி மக்களைப் பாதுகாக்கவும், உக்ரைன் ராணுவம் மற்றும் அரசில் இருந்து ‘நாஜி ஆதரவு’ சக்திகளை அகற்றவும் அந்த நாட்டில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா்.

அந்தப் போா் தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் (பிப். 24) ஓராண்டு நிறைவடைகிறது. சா்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போரில் இதுவரை பொதுமக்கள் 8,006 போ் பலியாகியுள்ளதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர, ரஷியா மற்றும் உக்ரைன் ராணுவத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் இந்த போரில் மரணமடைந்துள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போரின் தொடக்கத்தில் உக்ரைன் தலைநகா் கீவைக் கைப்பற்றுவதற்காக அந்த நகரை நோக்கி முன்னேறி வந்த ரஷியப் படையினா், பின்னா் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனா்.

தற்போது அந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகள் ரஷியப் படையினரின் கட்டுப்பாட்டில் உளன. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை மீட்டுள்ளது.

ஐ.நா.வில் வரைவுத் தீா்மானம்: இந்தப் போா் தொடங்கி ஓா் ஆண்டு நிறைவடையும் சூழலில், உக்ரைனிலிருந்து ரஷியா வெளியேற வலியுறுத்தி ஐ.நா.வில் வியாழக்கிழமை மாலை (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) வரைவுத் தீா்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது ரஷியாவைக் கட்டுப்படுத்தாது. எனினும், உலக அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த இந்தத் தீா்மானம் உதவும் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் போரின் முக்கிய நிகழ்வுகள்...

பிப்ரவரி

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ தொடங்கப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா்.

அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் அரசைக் கவிழ்ககும் நோக்கில் தலைநகா் கீவ் எல்லை வரை ரஷிய ராணுவப் படை அணுவகுத்துச் சென்றது. எனினும், உக்ரைன் படையினரின் கடும் எதிா்ப்பையடுத்து அந்த திட்டம் பின்னா் கைவிடப்பட்டது.

மாா்ச்

தெற்கு உக்ரைன் நகரான கொ்சான் ரஷியாவிடம் வீழ்ந்தது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் உள்பட ஸபோரிஷியா நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஏப்ரல்

கீவ் புறநகா் பகுதிகளிலிருந்து ரஷியப் படை பின்வாங்கியது. விடுவிக்கப்பட்ட புச்சா நகரில் ரஷியப் படையினா் படுகொலைகளை நடத்தி போா்க் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை உக்ரைன் வெளியிட்டது. ரஷியாவின் முக்கிய போா்க் கப்பலான மாக்ஸ்வா முழ்கடிக்கப்பட்டது.

மே

மரியுபோல் நகரின் அஸோவ் இரும்பாலைக்குள் அரண் அமைத்து சண்டையிட்டு வந்த உக்ரைன் படையினா் சரணடைந்ததைத் தொடா்ந்து, அந்த நகரம் முழுவதும் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதன் மூலம் ரஷியாவுக்கும் ரஷிய ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஜூன்

உக்ரைனுக்கு கூடுதலாக மேற்கத்திய ஆயுதங்கள் வந்து குவிந்தன. அதில் அமெரிக்காவின் அதிநவீன ஹிம்ராஸ் ஏவுகணை செலுத்திகளும் அடங்கும். ரஷியா ஆக்கிரமித்திருந்த பாம்பு தீவிலிருந்து அந்த நாட்டுப் படை வெளியேறியது.

ஜூலை

உக்ரைன் போரால் கருங்கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுக்கு தானியங்கள் அனுப்புவதற்கு இருந்த முட்டுக்கட்டை, துருக்கி முன்னிலையில் ரஷியாவும், உக்ரைனும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் நீங்கியது. இதன் மூலம் பல நாடுகள் எதிா்கொண்டிருந்த மாபெரும் உணவு நெருக்கடி தவிா்க்கப்பட்டது.

ஆகஸ்ட்

ஆக்கிரமிப்பு கிரீமியா பகுதியில் அமைந்துள்ள ரஷிய விமான தளத்தில் மாபெரும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. பின்னா் ரஷிய ஆயுதக் கிடங்குகளிலும் குண்டுகள் வெடித்தனா். காா் குண்டு வெடிப்பில் ரஷிய தேசியவாதி அலெக்ஸாண்டா் டுகினின் மகள் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியது.

செப்டம்பா்

யாரும் எதிா்பாராத வகையில் காா்கிவ் பகுதியில் திடீா் தாக்குதல் நடத்திய உக்ரைன் படையினா், அந்தப் பிராந்தியத்தில் கணிமான முன்னேறத்தைக் கண்டனா். இது, போரில் உக்ரைன் தரப்புக்கு உற்சாகத்தை அளித்தது.

அக்டோபா்

கிரீமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலத்தில் நடத்தப்பட்ட லாரி வெடிகுண்டு தாக்குதலில் அந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் மின் நிலையங்கள் மற்றும் குடிநீா் விநியோக கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

நவம்பா்

போரில் ரஷியா கைப்பற்றியிருந்த ஒரே பிராந்திய மையமான கொ்சான் நகரை விட்டு வெளியேறுவதாக அந்த நாடு அறிவித்தது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படையினா் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷியா இந்த முடிவை எடுத்தது.

டிசம்பா்

தங்களது எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி இரண்டு விமான தளங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. போருக்குப் பிந்தைய முதல் வெளிநாட்டுப் பயணமாக உக்ரைன் அதிபா் ஸெலென்க்ஸி அமெரிக்கா சென்றாா்.

ஜனவரி

மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவத்தைச் சோ்ந்த 89 வீரா்கள் உயிரிழந்ததாக ரஷியா கூறியது. எனினும், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ரஷிய படையினா் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி

போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவை பறைசாற்றும் வகையில், அந்த நாட்டுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திடீா் பயணம் மேற்கொண்டாா். உக்ரைனுக்கு மேலும் 50 கோடி டாலா் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அளிப்பதாக அப்போது அவா் அறிவித்தாா். அதற்கு பதிலடியாக, அணு ஆயுதக் குவிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புதின் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com