கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பால் வடகொரியா தலைநகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் கரோனா நோய்த் தொற்றால் பாதித்து பெரும் இழப்பை சந்தித்த நிலையில், வடகொரியாவில் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு முதல்முறையாக வடகொரியாவில் கரோனா நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ஆகஸ்ட் மாதமே கரோனாவை வென்றதாக வடகொரியா அறிவித்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே பியோங்யாங் நகரில் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், பியோங்யாங் முழுவதும் இன்றுமுதல் 5 நாள்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பியோங்யாங் நகரை தொடர்ந்து வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.