அமெரிக்காவில் கூகுள் அலுவலக மாடியிலிருந்து குதித்து மென்பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அழுத்தமின்றி பணிபுரிவதற்கு சகல வசதிகளும் செய்துகொடுக்கும் அலுவலகம், கூகுள் நிறுவனம் என்ற பிம்பம் நிலவி வரும் நிலையில், இந்த தற்கொலை செய்தி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கூகுள் கிளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான மென்பொறியாளர் ஒருவர், கூகுள் அலுவலகத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். (தற்கொலை செய்துகொண்டவர் குறித்த எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை)
உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த நியூயார்க் காவல் துறையினர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தொடர்பாக எந்தவொரு ஆவணமும் கிடைக்கவில்லை என காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த, ஜேக்கப் பிராட் என்ற 33 வயது மென்பொறியாளர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தின் மற்றொரு மென்பொறியாளரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.