
ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு நீண்ட தொலைவு ஏவுகணைகளை வழங்கி வருவதாக பிரிட்டன் வியாழக்கிழமை அறிவித்தது.
இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் கூறியதாவது:
250 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட ‘ஸ்டாா்ம் ஷேடோ’ ரக ஏவுகணைகளை உக்ரைனுக்கு வருகிறோம்.
அந்த வகை ஏவுகணைகள் ஏற்கெனவே உக்ரைனில் உள்ளன; அல்லது அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாா் அவா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.
அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன.
இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், தொலைதூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பி வருவதாக பிரிட்டன் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.