காஸாவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்பொருட்டு எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படையினர் எல்லை தாண்டி இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதுடன் உணவு, குடிநீர், மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
காஸா போரில் இதுவரை இரு தரப்பிலும் 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் காஸாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையே இருக்கும் எல்லையான ரஃபா எல்லை மூடப்பட்டிருந்ததால் காஸாவில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கும் ஹமாஸ் ஆளுகைக்குட்பட்ட காஸாவிற்கும் இடையே உள்ள ரஃபா எல்லை இந்திய நேரப்படி இன்று(திங்கள்) காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின குறிப்பாக காஸாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறவே ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக இஸ்ரேல் போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்தம், ரஃபா எல்லை திறப்பு ஆகியவற்றுக்கு இஸ்ரேலும் ஹமாஸ் தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது.