
கோப்புப்படம்
தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக அவர் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துவரும் நிலையில், நிகழாண்டு ஜி20 உச்சிமாநாடு தில்லியில் வரும் 9, 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் கிஷிடா உள்ளிட்டோா் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க | பொறியியல் சேர்க்கை முடிந்தது, 50 ஆயிரம் இடங்கள் காலி! 3-ல் 1 பங்கு!!
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபா் மேக்ரான், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தொடர்ந்து அவர் வங்கதேசமும் செல்கிறார்.
முன்னதாக மேக்ரான், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமா் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. தில்லி ஜி20 மாநாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...