ரஷியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள பதிவருக்கு சொந்த குழந்தையைப் பசியால் வருத்தி உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது ரஷிய நீதிமன்றம்.
44 வயதான மாக்ஸிம் லியுட்டி கடுமையான வீகன் (காய்கறிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்) உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுபவர். இவரது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைக்கு நீர், உணவு கொடுக்கமால் சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.
கடந்த வாரம் மாக்ஸிம் நீதிமன்றத்தில் தன் தவறை ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு முன்பு வரை தனது மனைவி ஓக்சானா மிரோனோவா(34) மீது பழி சுமத்தி வந்தார்.
அவரது மனைவிக்கும் பிணையில் வெளிவரா இயலாத 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைக்குத் தாய்ப் பால் புகட்டுவதில் இருந்து கூட மிரோனோவாவைக் கட்டுப்படுத்தியுள்ளார் மாக்ஸிம்.
சூரிய ஒளி மூலம் மட்டுமே உணவு பெறும் சோதனையைத் தன் குழந்தை மூலம் பரிசோதித்து பார்த்துள்ளார். பரிசோதனை முடிவுகளை வைத்து மற்றவர்களுக்கு இந்த உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவிருந்தார்.
மாக்ஸிம் ஒரு குழுவை நடத்தி வந்ததாகவும் அதிலிருந்து தன் மகளைத் தனித்திருக்க தான் கோரியதாகவும் மிரோனோவாவின் தாயார் டெய்லி மெயிலிடம் தெரிவித்துள்ளார்.