அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் உருவாகியுள்ள நிலையில் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் தங்கள் ஆதரவை இஸ்ரேலுக்கு அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் 7-வது மாதமாக தொடர்ந்துவருகிறது. பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
காஸாவில் போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகம் தொடங்கி நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில் ஹார்வார்ட் கேப்ஸ்-ஹாரிஸ் ஆய்வின் தகவல்படி, அமெரிக்காவில் பதிவுசெய்த வாக்காளர்களில் 80 சதவிகிதம் பேர் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் 20 சதவிகிதம் பேர் மட்டுமே பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் உருவாகியுள்ள போராட்டங்கள் நாட்டின் முழு மனநிலையை காண்பிக்கவில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பவர்களில் பெரும்பானமையானவர்கள் இளைஞர்களாக உள்ளதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
கடந்த மாதமும் இதே போலான ஒரு ஆய்வு, 79 சதவிகித அமெரிக்கர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததைக் குறிப்பிட்டது.
இளைஞர்களில், 25 முதல் 34 வயதுள்ளவர்கள் 64 சதவிகிதம் பேரும் 18 முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேரும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.