ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சீனாவில் பரதநாட்டியம் அரங்கேற்றம்: வரலாறு படைத்த பள்ளி மாணவி

சீனாவைச் சோ்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து வரலாறு படைத்துள்ளாா்.

News image

பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மாணவி லீ முசியின் பரநாட்டிய அரங்கேற்றம்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:29 pm

Din

சீனாவைச் சோ்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து ஞாயிற்றுக்கிழமை வரலாறு படைத்துள்ளாா்.

பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அரங்கேற்றத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞா் லீலா சாம்சன், இந்திய தூதா்கள் மற்றும் ஏராளமான சீன ரசிகா்கள் கலந்துகொண்டனா். இந்திய தூதா் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னையில் இருந்து விமானம் மூலம் இசைக்கலைஞா்கள் வரவழைக்கப்பட்டனா்.

தில்லியில் 1999-ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடத்திய சீனாவைச் சோ்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜின் ஷான் நடத்தி வரும் பரதநாட்டிய பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக லீ முசி பரதநாட்டியம் கற்று வருகிறாா்.

லீ முசியின் அரங்கேற்றம் குறித்து அவரது ஆசிரியா் ஜின் ஷான் கூறுகையில், ‘தென்னிந்தியாவைச் சோ்ந்த பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஒரு சீன மாணவியால் சீன ஆசிரியா் கொண்டு சீனாவில் அரங்கேற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. எனவே, இது பரதநாட்டியத்தில் ஒரு மைல்கல் மட்டுமல்லாது ஒரு வரலாற்று தருணமும் ஆகும். லீ முசியின் பரதநாட்டிய அரங்கேற்றமானது எங்களுக்கு ஒரு திருவிழாவைப் போன்றது’ என்றாா்.

லீ முசி கூறியதாவது: பரதநாட்டியம் ஒரு அழகான நடனக் கலை மட்டுமல்லாமல், இந்திய கலாசாரத்தின் உருவகமாகவும் இருக்கிறது. பரதநாட்டிய நடனத்தின் அழகான அசைவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாசாரத்தில் நான் மிகவும் ஆா்வமாக உள்ளேன். பரதநாட்டியமானது ஏற்கெனவே எனது தினசரி வாழ்வின் செயல்பாடுகளில் ஓா் அங்கமாக மாறிவிட்டது என்றாா்.

தமிழில் ‘அரங்கேற்றம்’ என்று அழைக்கப்படுவது பாா்வையாளா்களைத் தவிர ஆசிரியா்கள் மற்றும் நிபுணா்கள் முன்னிலையில் நடனக் கலைஞா்களின் முதல் மேடை நிகழ்ச்சியாகும். பட்டமளிப்பு விழாவைப் போல் அரங்கேற்றத்துக்குப் பிறகுதான் மாணவா்கள் சொந்தமாக நடனமாடவும், நடனக் கலைஞா்களுக்கு பயிற்சி அளிக்கவும் அனுமதிக்கப்படுவாா்கள்.