சியோல் : கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அதற்கு பதிலடியாக வடகொரியா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், போர் தளவாடங்களை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த ஏவுகணை, அதன் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் படங்களையும் வடகொரியா வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறனுடன் இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை வடகொரிய தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
தென்கொரிய கடற்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் வடகொரியா கடல்வழியாக பல ஏவுகணைகளை ஏவி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எனினும், இவையனத்தும் தங்களின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதற்கான நடவடைக்கைகள் மட்டுமே எனவும், யாரையும் அச்சுறுத்தும் நடவடிக்கை அல்ல என்று வடகொரிய தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த ஆண்டு வடகொரியா நடத்தியுள்ள நான்காவது ஏவுகணை சோதனை முயற்சி இதுவாகும். முன்னதாக கடந்த மாதம் 3 முறை ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இம்மாதத்தில் தங்களது முதல் ஏவுகணை சோதனை முயற்சியை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.