சீயோல்: வடகொரியா, 2018 ராணுவ ஒப்பந்ததை மீறி தென்கொரியாவின் சர்ச்சைக்குரிய கடலோர பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல் ஓராண்டுக்கு மேலாக நிலவி வந்த இரு நாடுகளுக்கிடையேயான அமைதியான சூழலைக் குலைத்துள்ளது.
தென்கொரியாவின் உயரதிகாரிகள், வட கொரியா 200 சுற்று குண்டுகளைக் கடல்பரப்பில் தாக்கியதாகவும் இந்த போர்ப் பயிற்சி தென்கொரியாவைத் தூண்டுவதற்காகவே செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை. இதற்கான பதிலடியைத் தென்கொரியா கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் கடலோர தீவான யோன்பியாங் மக்களை அங்கிருந்து இடம்பெயர ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தாக்குதலுக்கு தென்கொரியா பதிலடி கொடுக்கவிருப்பதால் இந்த இடப்பெயர்வுக்கு உத்தரவிட்டதாகக் கருதப்படுகிறது.
ஏவுகணைகளை நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று செலுத்தும் வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு வட கொரிய அதிபர் பார்வையிட சென்ற புகைப்படங்கள் வடகொரிய செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 84
தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பது குறித்து அவர் பேசியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.