சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதும், காஸாவின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்துவது சர்வதேச சட்டத்தின் மீது இஸ்ரேலுக்கு மரியாதை இல்லை என்பதைக் காட்டுகிறது என பாலஸ்தீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் போர்க் குற்றங்களைத் தொடர்ந்து வருவதாகவும் காஸா மக்களைப் பாதுகாக்குமாறு சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளை நிராகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தனது மனிதநேயமற்ற தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்திவருகிறது. 23,800-க்கும் அதிகமான மக்களை கொலை செய்துள்ளது. காஸாவின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தளங்களை தரைமட்டமாக்கியுள்ளது.
இதையும் படிக்க: சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் காயம்பட்ட மக்கள்!
கடந்த 24 மணிநேரத்தில் 135 பேரைக் கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். மேற்கு கடற்கரைப் பகுதியில் 18 வயது நிரம்பிய இளைஞரை இஸ்ரேல் ராணுவம் அடித்தே கொலை செய்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு உணவுகளும், மருந்துகளும், எரிபொருள்களும் இல்லாமலும், சுகாதாரமற்ற சூழலில் எளிதில் நோய் பரவும் நிலையிலும் காஸா மக்கள் தவித்து வருகின்றனர்.