இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இன்றுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி 24 மணிநேரப் பேரணி இஸ்ரேலின் தெல் அவிவில் நடைபெறுகிறது.
கடந்த அக்டோபர் 7-ல் 1,139 பேரைக் கொன்று, 240 பேரைக் கடத்திச் சென்றது ஹமாஸ் அமைப்பு. தற்காலிக போர் நிறுத்தத்தில் பிணைக்கைதிகள் பரிமாற்றம் நடந்ததில் இன்னும் 139 பேர் ஹமாஸ் பிடியில் உள்ளதாகத் தெரிகிறது.
ஹமாஸ் அமைப்பிற்கு பதலடிகொடுக்கும் எண்ணத்தில் மூன்று மாதங்களாக காஸாவின் மீது இஸ்ரேல் தன் தாக்குதல்களைத் தொடர்ந்துவருகிறது. 23,800-க்கும் அதிகமான மக்களை இதுவரைக் கொன்றுகுவித்துள்ளது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துமாறு வலியுறுத்திவரும் நிலையில், காஸாவின் வலியை நிறுத்த எந்த வழியும் பிறக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை எல்லா நாடுகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.
இதையும் படிக்க: இஸ்ரேல்- ஹமாஸ் போர்: அதிர்ச்சியளிக்கும் எண்கள்!
இஸ்ரேல் மக்களும் இஸ்ரேல் அரசுக்கு எதிரான போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருடனான சண்டையில் சொந்த நாட்டு பிணைக்கைதிகள் மூவரை இஸ்ரேல் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. எனினும் போரை நிறுத்த இஸ்ரேல் உடன்படவில்லை.
இந்நிலையில் இன்று (ஞாயிறு) 24 மணி நேரப் பேரணியை மக்கள் துவங்கியுள்ளனர். கடந்த அக்டோபர் 7-ல் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நேரமான காலை 6.29 மணியளவில் பேரணி துவங்கப்பட்டுள்ளது.
பிணைக்கைதிகளை மீட்டு வருவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெரும்பான்மையான மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிகிறது. பலர் இஸ்ரேல் அரசுக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் எதிராக குரல் எழுப்பிவருகின்றனர்.
நேற்று இரண்டு போராட்டங்கள் இஸ்ரேலின் தெல் அவிவில் நடைபெற்றுள்ளது. ஒன்று பிணைக்கைதிகளை மீட்டுவர அரசுக்கு அழுத்தம் தரும் வகையிலும், மற்றொன்று அரசுக்கு எதிராகவும் நடைபெற்றுள்ளது.