வட கொரியாவில் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு 12 ஆண்டுகளுக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனையை அளித்துள்ளது. இது தொடர்பான காணொலி ஒன்றினை வடகொரியாவிலிருந்து வெளியேறிவர்ளுடன் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கே-பாப் எனப்படும் தென் கொரிய காணொலி பாடல்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்ததாகவும், பரப்பியதாகவும் இரண்டு 16 வயது சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு 12 ஆண்டுகள் கடின வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சீனாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 13 பேர் பலி
இணையத்தில் பரவிவரும் காணொலியில், ஏறத்தாள 1000 மாணவர்கள் சுற்றி அமர்ந்திருக்கும் பொதுவெளி அரங்கம் ஒன்றில், இரண்டு மாணவர்கள் அரக்கு நிற அங்கி அணிந்து கையில் விலங்கு பூட்டப்பட்டு நிற்கிறார்கள். அவர்களுக்கு அனைவர் முன்னிலையில் இந்த தண்டனை வழங்கப்படுகிறது.
"வெளிநாட்டுக் கலாச்சாரம் இவர்களை மயக்கியுள்ளது. அவர்கள் வாழ்க்கை நாசமாவதற்கு அதுவே காரணமாகிவிட்டது" என அந்த இடத்தில் ஒரு அதிகாரி கூறுகிறார். தென்கொரிய பொழுதுபோக்கு படைப்புகளைப் பார்க்கும் வடகொரியர்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வடகொரிய அரசு அளிப்பது இது முதல்முறையல்ல.