ரஷியாவின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகம், மரபியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
மனிதர்கள் ஒருகாலத்தில் நூறாண்டு வரை வாழ்ந்ததாகவும் நவீன மனிதர்களின் ஆயுள் குறைவதற்கு முன்னோர்களின் பாவங்களே காரணம் என அவர் பேசியது சர்ச்சையானது.
அலெக்சாண்டர் குத்ரியவட்சேவ், ரஷியாவின் வவிலோவ் மரபியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். 2023-ல் கருத்தரங்கில் பேசிய அவர், மேற்சொன்ன சர்ச்சைக்குரிய கருத்தை விளக்கியுள்ளார்.
மனிதர்கள், பைபிளில் சொல்லப்படுகிற வெள்ளக் காலத்திற்கு முன்பு 900 ஆண்டுகாலம் வாழ்ந்ததாகவும் அசலான, மூதாதையர்கள் மற்றும் தனிப்பட்ட பாவங்களால் மரபியல் நோய் ஏற்படுவதாகவும் அது மனித ஆயுளைக் குறைப்பதாகவும் அவர் பேசினார்.
ஏழு தலைமுறை வரை முன்னோர்கள் செய்த பாவத்திற்கு அவர்களின் சந்ததியினர் பொறுப்பாவதாகவும் அவர் பேசியது சர்ச்சையானது.
அலெக்சாண்டர் பதவி நீக்கப்பட்டதற்கான காரணம், அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
ரஷியாவின் ஆர்தோடாக்ஸ் தேவாலயம் அலெக்சாண்டரின் பதவி நீக்கத்தை, அரசின் ‘மத பாகுபாடு’ என விமர்சித்துள்ளது.
ரஷியா தேவாலயத்தின் குடும்ப விவகார ஆணையத்தின் தலைவர் பியாதோர் லுக்யானோவ், “மதம் சார்ந்த கருத்துகள் மற்றும் அதன் மீதான நம்பிக்கையைக் கொண்டிருந்தமைக்காக அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளை மீறுகிறது. சோவியத் காலத்திலேயே மரபியல் என்பது மூடநம்பிக்கை என ஒடுக்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்
கம்யூன்ஸிட் ஆட்சியாளர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அரசு மரபுசார் அறிவியலை முடக்கியது குறிப்பிடத்தக்கது.