ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 60 பேர் பலியாகினர்.
இந்த படுபயங்கர தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. எனினும், இதன் பின்னணியில் ஐஎஸ் அமைப்புத்தான் இருந்துள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
ரஷியாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகி, ஸ்டாலின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த நிலையில்தான், மாஸ்கோவில் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், மிக மோசமானதாக இது கருதப்படுகிறது.
மேற்கு மாஸ்கோவின் க்ரோகஸ் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள பிரம்மாண்ட இசையரங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் சுமார் ஆறு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய அரங்கமாகும். இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது, அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். அரங்குக்கு பயங்கரவாதிகள் தீ வைத்ததில் சுமார் 60 பேர் பலியாகியுளள்னர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து, ரஷியாவில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்கான தொடர் திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளது. உளவுத்துறையும் பல பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த கோரத் தாக்குதல் நடந்திருப்பது, அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.