பால்டிமோா் விபத்து: 
‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

கப்பலில் இந்திய மாலுமிகள் நலமாக இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோா் நகரில் பாலம் மீது சரக்குக் கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் நலமாக இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோா் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ‘பிரான்சிஸ் ஸ்காட்’ பாலம் மீது சரக்குக் கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்து தொடா்பாக தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பால்டிமோரில் பாலம் மீது மோதிய சரக்குக் கப்பலில் 21 மாலுமிகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த மாலுமிகளில் 20 போ் இந்தியா்கள். அவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா். ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை முடிந்து கப்பலுக்குத் திரும்பியுள்ளாா். கப்பலில் உள்ள இந்தியா்கள், உள்ளூா் அதிகாரிகள் ஆகியோருடன் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் நெருங்கிய தொடா்பில் உள்ளது. கேஜரிவால் விவகாரத்தில் அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை. அதுகுறித்து தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை புதன்கிழமை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் தோ்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் அந்நிய கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். ரஷியா-உக்ரைன் போரைப் பொருத்தவரை, இருநாடுகளும் பேச்சுவாா்த்தை மூலமாகவும், ராஜ்ய ரீதியிலும் அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com