இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில் இந்தியர்கள் ஈடுபட்டதற்கான நம்பகத்தன்மையான ஆதாராங்களை இதுவரை அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவனைவாத அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வரும் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது அமெரிக்காவில் நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலில் நிகில் குப்தா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை முயற்சியில் இந்திய புலனாய்வு அதிகாரி, ரா அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் யாதவுக்கு தொடர்பிருப்பதாகவும், இந்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் அனுமதியுடன் நடைபெற்றதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மீதான தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மரியா கூறியதாவது:
“எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இந்த சம்பவத்தில் இந்தியர்கள் ஈடுபட்டதற்கான நம்பகத்தன்மையான ஆதாராங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஊகங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகின்றது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் இதே நிலைதான்.
இந்தியாவில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் சிக்கல் விளைவித்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக வாஷிங்டன் போஸ்ட்டின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்கா பகிர்ந்த ஆவணங்களின் ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆதாரமற்ற ஊகங்கள் அடிப்படையிலான எந்த கருத்துகளும் பயனளிக்காது எனத் தெரிவித்திருந்தார்.