
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வாகியிருப்பதற்கு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியர்களின் எச்-1பி விசா நடைமுறையில் கிடுக்கிப்பிடி போடப்படும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குடியுரிமை கனவு நிறைவேறாமல் போகலாம் என்று பலவாறு கணிப்புகள் வந்து குவிந்து, கவலையை ஏற்படுத்தினாலும் கூட சில நல்ல விஷயங்களும் இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு எச்1பி விசா பெற்று அமெரிக்காவுக்குள் நுழைந்த ஊழியர்களின் ஊதியம் அதிகரித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தற்போது, ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1பி விசா வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப், இந்த அவளை சற்று மாற்றியமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், டிரம்ப் ஆட்சிக்காலத்தில், எச்1பி விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது கடுமையாக இருந்தது. அது கிட்டத்தட்ட 24 சதவீதம். இதுபோல, வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களும் கூட கடுமையான பரிசீலனைக்கு உள்படுத்தப்படும் என்பது மற்றொரு கவலை.
இதையும் படிக்க.. வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கிய அமெரிக்கர்கள்!
இந்த கவலைகளையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், டொனால்ட் டிரம்ப் வெற்றியைக் கொண்டாடி வருவதற்கான காரணங்களாக, இந்திய பங்குச் சந்தைகளில், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் நல்ல மதிப்பைப் பெறும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதல், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.
அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்கும்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிதிக் கொள்கையை நிர்ணயிக்கும் வட்டி விகிதம், பணவீக்கம் போன்றவை நல்ல நிலையில் இருக்கும்போது, அமெரிக்க நிறுவனங்கள், தகவல்தொழில்நுட்பத்துக்கு அதிக நிதி ஒதுக்கும். இந்தியாவில் உள்ள அவுட்சோர்சிங் துறை அமெரிக்க டாலரின் பணத்தைப் பெற்று இந்திய ரூபாயில் செலவிடும்போது வருவாய் அதிகரிக்கும்.
கொள்கை உருவாக்கத்தில் நிலைத்தன்மை..
குடியரசுக் கட்சியினர், அமெரிக்க அரசு, செனட் சபை மற்றும் காங்கிரஸ் சபைகளில் கோலோச்சும்போது, கொள்கை உருவாக்கத்தில் நிலைத்தன்மை ஏற்படும். இதனால், திடீர் மாற்றங்கள் நிகழுமா என்ற அச்சம் இருக்காது.
பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 21 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அமெரிக்க நிறுவனங்கள் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செலவிடும் தொகை குறைவதால், அது இந்தியாவில் உள்ள புதிய தொழில் உருவாக்கங்களுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் உதவும் வாய்ப்பு உருவாகும்.
சீனாவுக்கு டொனால்ட் டிரம்ப் எதிரானவர் என்பதால், அமெரிக்க நிதி இந்தியா பக்கம் திரும்பலாம். சீனாவுக்கு கடினமான போக்கை கடைப்பிடிக்கவே டொனால்ட் டிரம்ப் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் ஒட்டுமொத்த நன்மையும் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்தியாவில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும் செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட நகர்வும் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.