நேபாளத்தில் களையிழந்த தசரா கொண்டாட்டம்! உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு!

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
நேபாளத்தில் களையிழந்த தசரா கொண்டாட்டம்! உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
PTI
Published on
Updated on
2 min read

நேபாளத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அக்டோபர் 1 நிலவரப்படி, நேபாளத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

மேலும் 28 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

உருக்குலைந்துபோன நேபாளம்:

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உருக்குலைந்து காணப்படுகிறது.

தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமலும், சுகாதார வசதிகளின்றியும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிலச்சரிவுகளால் காத்மாண்டுவை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் காத்மாண்டுவுக்கு செல்லும் உணவு உள்பட உணவுப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, காய்கறிகள் உள்பட உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

காத்மாண்டுவின் முக்கிய நீராதாரமான பாகமதி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.இதனிடையே, கடந்த 3 நாள்களாக பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால், நேபாளத்தில் 20 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன்காரணமாக, 1,100 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காத்மாண்டுவிலும் பிற பகுதிகளிலும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேபாள பிரதமர் கட்கா பிரகாஷ் ஒலி தலைமையில் திங்கள்கிழமை(செப். 30) கேபினட் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 4,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ளோருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், உணவு உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI

இந்நிலையில், தலைநகர் காத்மாண்டு உள்பட நேபாளத்தின் பிற பகுதிகளிலும் வானிலை சீரடைந்து இயல்புநிலை திரும்பிவரும் சூழலில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நேபாளத்தில் மிகப்பெரிய திருவிழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ‘தசைன் (தசரா)’ வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில், நிலச்சரிவுகளால் சாலைகள் சேதமடைந்து சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை(அக். 1) வரை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கான உதவி எண்கள்:

நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்காணும் அவசரகால தொலைபேசி எண்கள் மூலமாக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

  • +977-9851316807

  • +977-9851107021

  • +977-9749833292

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com