வியத்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 179-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் வியாழக்கிழமை கூறியதாவது:
வியத்நாமில் யாகி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ எட்யுள்ளது. 128 பேர் மாயமாகியுள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
தலைநகா் ஹனோயில் சிவப்பு நதியின் நீர்மட்டம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் அந்த நகரில் இடுப்பளவுக்கு வெள்ள நீா் சூழ்ந்தது. அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் ஒன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்து அந்த வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்த 13 போ் நீரில் மூழ்கினர்.
வியத்நாமின் வடக்குப் பகுதியில் மணிக்கு 149 கிலோமீட்டா் வேகத்தில் கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்த யாகி புயல், அந்த நாடு கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துள்ள மிக மோசமான புயல் என்று கூறப்படுகிறது.
யாகி புயலானது 149 கிமீ (92 மைல்) வேகத்தில் காற்றுடன் சனிக்கிழமை கரையைக் கடந்தது.
ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்த போதிலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
வடக்கு வியத்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் கிராமத்தையும் திடீர் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.