காஸாவின் தெற்கு எல்லை நகரமான ராபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 28 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தரைவழி போர் நடவடிக்கையை விரிவுப்படுத்துவதால் ராபாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களை வெளியேற்ற திட்டமிட்டிப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவின் 23 லட்சம் மக்கள், ராபாவில் புலம்பெயர்ந்து அடைக்கலம் அடைந்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸாவின் மக்களுக்கான முறையான திட்டமிடல் இல்லாமல் ராபாவில் போர் நடவடிக்கையை விரிவுப்படுத்துவது பேரழிவை ஏற்படுத்துமென அமெரிக்கா எச்சரித்திருந்தது. இதனால் இஸ்ரேல்- அமெரிக்கா இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ராபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாள்தோறும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
சனிக்கிழமை ராபாவில் இஸ்ரேல் நடத்திய மூன்று வான்வழி தாக்குதலில் குறைந்தது 28 பேர் பலியாகியதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 மாதமே ஆன குழந்தை உள்பட 10 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
தரைவழி போர் நடவடிக்கையின் பகுதியாக கான் யூனிஸ்- நசீர் மருத்துவமனையில் இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியதாகவும் இன்னும் சிலர் காயமுற்றதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதையும் படிக்க: பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.4 ஆகப் பதிவு!
மருத்துவமனையில் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு கூட மருத்துவ பணியாளர்களால் செல்ல முடியாதளவுக்கு கடும் சண்டை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.