இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் படையின் துணைத் தலைவர் சாலெஹ் அல்-அரோவ்ரி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் காஸா எல்லையைத் தாண்டி லெபனான் வரை விரிவடைந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் ஹமாஸ் படையின் துணைத் தலைவர் சாலெஹ் அல்-அரோவ்ரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட் பகுதியில் பதுங்கியுள்ள ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது.
இது தொடர்பாக பேசிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர், பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் கட்டடங்கள் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் அல்-அரோவ்ரி தனது பாதுகாவலர்களுடன் கொல்லப்பட்டார் எனக் குறிப்பிட்டார். காஸா ஊடகங்களும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன.