இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் இந்த மூன்று மாத போரில் மனிதநேயம் மாண்டதை உலகம் அறியாமலில்லை. அதை மேலும் அழுத்திச் சொல்லும் விதமான சம்பவத்தை இஸ்ரேல் ராணுவத்தினர் செய்துள்ளது.
மேற்கு கடற்கரையில் சோதனைகளையும், தாக்குதல்களையும் தொடர்ந்து நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தினர், மூன்று பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். அதில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தின்மீது தனது வாகனத்தை ஏற்றி இறக்கியுள்ளது இஸ்ரேல் படை.
இந்த சம்பவம் காணொலியாக பரவி பாலஸ்தீன மக்களின் அவல நிலையை மேலுமொரு முறை கத்திச் சொல்லியுள்ளது.
இதையும் படிக்க: வெள்ளை மாளிகை கதவில் மோதிய வாகனம்: சதியா?
இஸ்ரேல் தொடர்ச்சியாக போர் குற்றங்களை செய்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதை நிரூபிக்கும் ஆதாரங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. ஆனால் போர் நின்றபாடில்லை. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை இந்த போர் ஓயாது என்கிறார் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இதுவரை 23,210 மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. 9,600-க்கும் அதிகமான குழந்தைகள் அதில் அடங்குவர். எஞ்சியிருக்கும் மக்கள், பசியினாலும், தாகத்தினாலும், சுகாதாரமற்ற சூழலில் தவிப்பதால் எளிதில் பரவும் நோய்களாலும் கொடுமைகளை அனுபவித்துவருகின்றனர்.
உணவு, தண்ணீர், மருந்துபொருள்கள் எதுவும் போதுமான அளவு கிடைக்காமல் சொந்த நாட்டில் அவதிப்படுகிறார்கள். தென்னாப்பிரிக்கா 'இது இனப்படுகொலை செயல்' என சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.