இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல்...
Published on

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

சீனாவுடனான வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன. ஹிமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா, உத்தரகண்டின் லிபுலேக், சிக்கிமின் நாதுலா ஆகிய மூன்று எல்லைப்பகுதிகள் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசு சீனாவிடம் பேசி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஹிமாசல பிரதேச அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ஷிப்கி லா கணவாய் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு மத்திய அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்ததாகவும், அவரது முயற்சிக்கு பயன் கிடைத்துள்ளதாகவும் ஹிமாசல பிரதேச அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா்த்தகம் மட்டுமல்லாமல், கைலாஷ் மானசரோவா் யாத்திரையையும் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச அரசின் கோரிக்கைக்கும் சீனா சாதகமாகப் பதிலளித்துள்ளது.

திபெத்தில் உள்ள தாா்சென் மற்றும் மானசரோவா் பகுதிகளுக்குச் செல்வதற்கு, இந்த ஷிப்கி-லா பாதை எளிதாகவும், குறுகியதாகவும் உள்ளது. ஷிப்கி லா கணவாய் வா்த்தகப் பாதையை மீண்டும் திறப்பதற்கான அனைத்து பணிகளையும் மத்திய வா்த்தக அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருவதாகவும் ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஷிப்கி லா கணவாய், பண்டைய காலத்தில் புகழ்பெற்ற பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. 1994-ஆம் ஆண்டு இந்தியா-சீனா ஒப்பந்தத்தின்கீழ் இது அதிகாரபூா்வ வா்த்தகப் புள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வா்த்தக பாதை மீண்டும் திறக்கப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதோடு, எல்லையோர மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவியாக இருக்கும்.

இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை தில்லியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்றனா்.

இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தக்கத்தை மீண்டும் தொடங்கவும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் பரஸ்பர வா்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு வழிவகை செய்யவும் இக்கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைலாஷ் மானசரோவா் யாத்திரையையும் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச அரசின் கோரிக்கைக்கும் சீனா சாதகமாகப் பதிலளித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com