விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி...

News image

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம் - AP

Updated On :27 ஆகஸ்ட் 2025, 2:48 pm IST

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்திய நிலையில், இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

போராட்டம் ஏன்?

பிரிட்டனின் எசெக்ஸ் மாகாணத்தில் எப்பிங் நகரில் புலம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான விடுதி உள்ளது. அந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அந்த விடுதியை மூடக் கோரி வலதுசாரி அமைப்பினர் விடுதிக்கு வெளியே திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பான, வழக்கை விசாரித்த எப்பிங் மாவட்ட நீதிமன்றம், விடுதியை நடத்த தற்காலிக தடை விதித்து, மூடுவதற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பிரிட்டன் இணையமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவித்தார்.

வார விடுமுறை நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடி புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

Story image

Ben Birchall

இதன்விளைவாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் விடுதிகள்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோர்களை தங்க வைக்க அந்நாட்டு அரசு சட்டப்பூர்வ கடமைப்பட்டுள்ளது. அவர்களை தங்க வைப்பதற்கான விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2020 வரை இந்த விடுதிகளை பயன்படுத்தும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அதன்பிறகு, போர், வறுமை, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

ஜூன் 2025 வரை 1.11 லட்சம் பேர் புலம்பெயர்ந்தோர் விடுதிகளில் தங்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் நிலைபாடு என்ன?

புலம்பெயர்வோர் விவகாரத்தில் சட்டவிரோதமாக ஆபத்தான இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து வருபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதாகும்.

இந்தாண்டில் இதுவரை மட்டும் 27,000 -க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வந்துள்ளனர். இது கடந்தாண்டு புள்ளி விவரங்களைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகமாகும்.

புலம்பெயர்ந்தோர் கடத்தலில் லாபம் ஈட்டும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வரை விடுதிகளில் தங்குவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கோரிக்கைகளை விரைவாக பரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது.

கெண்டில் உள்ள ராணுவ தளத்தில் புலம்பெயர்ந்தவர்களை தங்க வைப்பதை இந்தாண்டுடன் பிரிட்டன் அரசு நிறுத்தவுள்ளது. மேலும், எசெக்ஸில் உள்ள முன்னாள் விமானப் படை தளத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை தனியார் கட்டடங்களில் தங்கவைப்பது எளிதான ஒன்றாக இருந்தாலும், பல ஆண்டுகளாக வீடுகள் கட்டுவது குறைந்துள்ள நாட்டில், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

Summary

Protest against immigrants in Britain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.