

சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன் என்று போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா்.
இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. இதில் 15 போ் உயிரிழந்தனா். 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா்.
இரண்டாவது நபா் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் பிடிபட்டாா். தற்போது இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 14 பேரும், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையிலும் பலியானதாக போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. பலியானவர்கள் 10 முதல் 87 வயதுடையவர்கள் என்றும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் அடங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேலும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். நியூ சௌத் வேல்ஸ் போலீஸ் அதிகாரி மால் லேன்யன் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பேரில் ஒருவர் 50 வயதுடைய நபர் மற்றும் அவரது 24 வயது மகன் என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் கொல்லப்பட்டார். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அவரிடம் 6 இருந்தன என்று அவர் மேலும் கூறினார். அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.