
சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.
திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான, தலாய் லாமா சமீபத்தில் தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு, சீனாவில் வசித்து வரும் திபெத்திய கலைஞர்களான அசாங் (எ) ட்சுக்டே மற்றும் பெல்கியோங் ஆகியோர் அவரை புகழ்ந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு திபெத்திய பாடகர் ஷெர்டன் என்பவர் பாடி வெளியிட்ட பாடலை, இவர்கள் மறு உருவாக்கம் செய்து சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
தலாய் லாமாவின் வாழ்க்கை, வரலாறு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு அரிக் சோட்டன் என்பவர் எழுதிய அந்தப் பாடலின் வரிகள், திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசினால் சர்ச்சையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் வெளியிட்ட பாடல் சீனாவில் மிகப் பெரியளவில் கவனம் பெற்றவுடன், இருவரும் இம்மாத (ஜூலை) துவக்கத்தில், சீன அதிகாரிகளால் எந்தவொரு சட்டப்பூர்வ அறிவுப்பும் இன்றி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட அசாங் சீனாவில் திபெத்திய கலாசாரம், மொழி, தெய்வீகம் ஆகியவற்றை தனது பாடல்கள் மூலம் மக்களிடையே பரப்பி வந்துள்ளார்.
மேலும், கடந்த 4 வாரங்களாக இருவரைப் பற்றியும் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதால், திபெத்திய ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவர்களது நிலைக் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.