
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவினர் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக டிராகன் விண்கலத்தை இணைத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் இந்தக் குழுவில் தேர்வாகியிருந்தனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் இந்திய நேரப்படி, நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
சரியாக 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 25) மாலை 4.01 மணியளவில் இணைந்தது. இவர்கள் 2 வாரங்கள் அங்கு தங்கியிருந்து 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
ஏற்கெனவே, விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று நாசா விண்வெளி வீரர்கள், ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் மற்றும் மூன்று ரஷிய விண்வெளி வீரர்களுடன் இணைந்து இவர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.
இவர்கள் புவியீா்ப்பு சக்தி குறைவாக உள்ள விண்வெளிச் சூழலில் பச்சைப்பயிறு, வெந்தயம் ஆகிய விதைகளை வளா்த்து சுக்லா ஆய்வு மேற்கொள்கிறார். எதிர்காலத்தில் நீண்டகால விண்வெளி பயணத்திற்கு அவசியமான விண்வெளி ஊட்டச்சத்து மற்றும் தன்னிறைவு வாழ்க்கை ஆதரவு அமைப்புக்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த 1984 ஆம் ஆண்டில் இந்திய வீரா் ராகேஷ் சர்மா விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பின்னர் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
‘குழந்தையைப் போல் கற்றுணா்கிறேன்’
சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு முன்னதாக விண்வெளியில் இருந்து காணொலியில் உரையாடிய சுபான்ஷு சுக்லா, ‘சா்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தில் டிராகன் விண்கலம் பூமியைச் சுற்றி வந்தபோது, வெற்றிடத்தில் மிதப்பது போன்ற ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. எப்படி நடப்பது, எப்படி சாப்பிடுவது என ஒரு குழந்தையைப் போல கற்றுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.
விண்வெளியில் பூஜ்ஜிய ஈா்ப்பு விசை குறிகாட்டியாக அன்னப்பறவை பொம்மை ஒன்றையும் சுபான்ஷு சுக்லா உடன் எடுத்துச் சென்றுள்ளாா்.
Axiom4 Mission successfully docks at the International Space Station. The Mission has been piloted by India's Group Captain Shubhanshu Shukla
இதையும் படிக்க... குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.