18 வயதுக்குள்பட்டவா்கள் புகைபிடிக்க மாலத்தீவு தடை!

18 வயதுக்குள்பட்டவா்கள் புகைபிடிக்க மாலத்தீவு தடை!

2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மாலத்தீவு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
Published on

2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மாலத்தீவு சனிக்கிழமை முதல் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக மாலத்தீவு ஆகியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் 18 வயதுக்குள்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலத்தீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. இந்தத் தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும். விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும்.‘

இந்தத் தடை, மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு முழு தடை உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

18 வயதுக்குள்பட்டவருக்கு புகையிலை விற்றால் 50,000 ருஃபியா (சுமாா் ரூ.2.8 லட்சம்) அபராதம், வேப்பிங் சாதனம் பயன்படுத்தினால் 5,000 ருஃபியா (ரூ.28,000) அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற தலைமுறை அடிப்படை தடை பிரிட்டனில் சட்டமாக்கப்பட்டுவருகிறது. இன்னும் அமலுக்கு வரவில்லை. இதுபோன்ற சட்டத்தை நியூஸிலாந்து முதலில் கொண்டு வந்தது. ஆனால் 2023 நவம்பரில், அமலுக்கு வந்த அந்த சட்டம் ஒரு வருடத்திற்குள் ரத்து செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com